“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு” – திருக்குறளின் இந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில், தன் உள்ளத்தில் உயர்ந்த இலட்சியத்தை ஏந்தி, அனைத்து தடைகளையும் தாண்டி, இந்திய விமானப் படையில் தன் இடத்தைப் பிடித்திருக்கிறார் நமது மாணவர் சந்தோஷ் குமார்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, வறுமையை தன் வலிமையாக்கி, பகுதி நேர வேலைகளின் மூலம் தன் படிப்பிற்கும், பயிற்சிக்கும் தேவையான பொருளாதாரத்தை அவரே ஈட்டி, இன்று விமான படையில் பணி செய்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த வெற்றிப் பயணம், கனவுகளைத் துரத்தும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பாடப் புத்தகம்.
சாதாரண மாணவனாக இருந்து, இன்று தேசத்தின் பாதுகாவலனாக மாறியிருக்கும் சந்தோஷ் குமாரின் பயணத்தை, அவரோடு ஒரு நெகிழ்ச்சியான உரையாடல் வழியே காண்போம்.
கேள்வி: வணக்கம் சந்தோஷ்!. உங்களைப் பற்றியும், உங்கள் கல்வித்தகுதி பற்றியும் கூறுங்கள்.
சந்தோஷ்: வணக்கம் சார். என் பெயர் சந்தோஷ் குமார். நான் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள வீரமாங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பி.எஸ்சி பயோடெக்னாலஜி படித்துக் கொண்டிருக்கும்போதே இராணுவ தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகிகொண்டிருந்தேன்.
கேள்வி: ராணுவத்தில், குறிப்பாக விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஒரு ஆர்வம் உங்களுக்குள் எப்படிப் வந்தது?
சந்தோஷ்: சார், இது இன்று நேற்று உருவான கனவு இல்லை. என் சிறு வயது முதலே, ராணுவ வீரர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அவர்களின் கம்பீரமான உடையும், நாட்டிற்காக அவர்கள் செய்யும் தியாகமும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
அதனாலேயே, கல்லூரிப் படிப்பில் சேர்ந்தவுடன், முதல் வேலையாக தேசிய மாணவர் படையில் (NCC) இணைந்தேன். அங்கு கிடைத்த பயிற்சி, என் லட்சியத்தை மேலும் வலுப்படுத்தியது. தொடர்ந்து ராணுவத் தேர்வுகளை விடாமுயற்சியுடன் எழுதிக் கொண்டிருந்தேன்.
கேள்வி: நீங்கள் இராணுவ தேர்வுகளுக்காக படித்துகொண்டிருக்கும் போது உங்கள் குடும்ப சூழல் எவ்வாறு இருந்தது? பொருளாதாரம் ஒரு தடையாக இருந்ததா?
சந்தோஷ்: நிச்சயமாக சார். வீட்டில் வறுமை. கல்லூரிப் படிப்பிற்கே சிரமப்பட்டேன். இந்தச் சூழ்நிலையில், ராணுவத் தேர்வுக்கான பயிற்சிகளுக்குச் செலவு செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. ஆனால், நான் என் கனவை விட்டுவிடத் தயாராக இல்லை.
“நமக்கான வழியை நாம்தான் உருவாக்க வேண்டும்” என்று முடிவு செய்தேன். பெயிண்டிங் வேலை, கேட்டரிங் சர்வீஸ், கல்யாண வீடுகளில் உதவி செய்வது என கிடைக்கும் எந்த பகுதி நேர வேலையையும் நான் பாரபட்சம் பார்க்காமல் செய்தேன்.
அதில் வரும் வருமானத்தை வைத்து என் கல்லூரிச் செலவுகளையும், இராணுவ தேர்வுக்கான புத்தகங்கள், விண்ணப்பக் கட்டணம் என அனைத்தையும் நானே கவனித்துக் கொண்டேன்.
கேள்வி: பகுதி நேர வேலை, கல்லூரி படிப்பு மற்றும் இராணுவ தேர்வுக்காக தயாராகுதல் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் எவ்வாறு சமாளித்தீர்கள்?
சந்தோஷ்: கடினமாகத்தான் இருந்தது சார். காலை 9 மணிக்குக் கல்லூரி ஆரம்பித்தால், மதியம் 1 மணிக்கு முடிந்துவிடும். அதன் பிறகு, உடனடியாக பகுதி நேர வேலைக்கு ஓடிவிடுவேன்.
மாலை 6 மணி வரை வேலை, வேலை முடிந்து வீடு திரும்பியதும், என் உடம்பு அசதியில் துவண்டுவிடும். ஆனால், என் கனவு என்னை உறங்கவிடாது. மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை, அந்த இரண்டு மணி நேரம் தான் எனக்கான உலகம். அந்த நேரத்தில்தான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துவேன்.
சில நாட்களில் இரவு 10 மணி வரை கூட வேலை இருக்கும். அப்படிப்பட்ட நாட்களிலும், ஒதுக்கிய படிப்பு நேரத்தை நான் ஒருபோதும் தவறவிட்டதில்லை கூடுதலாக இரவு 12 மணி வரை படிப்பேன். அந்த ஒழுக்கம்தான் என் வெற்றியின் முதல் படியாக நான் கருதுகிறேன்.
கேள்வி: இந்திய விமானப் படை தேர்வு பற்றியும், நம்முடைய பயிற்சி பற்றியும் எப்படித் தெரியவந்தது?
சந்தோஷ்: நான் தொடர்ந்து பல தேர்வுகளை எழுதி வந்தேன் என்னால் அதில் வெற்றி பெற முடியவில்லை, ஒருநாள் என் சீனியர் அண்ணன்தான், இந்திய விமானப் படையில் (Air Force Non-Combatant) ஆட்சேர்ப்பு வந்திருப்பதாகக் கூறினார். அது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேர்வு. உடனடியாக விண்ணப்பித்தேன்.
ஆனால், இதற்கு எப்படிப் படிப்பது, எந்த மாதிரி கேள்விகள் கேட்பார்கள் என்று ஒரு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தேன். அப்போதுதான், என் சீனியர் உங்கள் யூடியூப் சேனலைப் பற்றிச் சொல்லி, “இதைப் பார், உனக்கு நிச்சயம் உதவும்” என்றார்.
கேள்வி: நம்முடைய All in One Defence Course உங்களுக்கு எப்படி உதவியாக இருந்தது?
சந்தோஷ்: சார், உங்கள் யூடியூப் சேனலில் Air Force Non Combatant Exam Preparation Strategy என்ற ஒரு வீடியோ இருந்தது அதை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு நம்பிக்கையும் தெளிவும் வந்தது. உடனே உங்களைத் தொடர்பு கொண்டு பேசினேன்.
உங்களுடைய Course ல் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன் அதில் நீங்கள் கொடுத்த வழிகாட்டுதலும், உங்கள் “All in One Defence Course”-ம் என் Preparation ஐ முற்றிலும் மாற்றிவிட்டது.
குறிப்பாக, நீங்கள் வழங்கிய Exam Pattern & Question Pattern மிகத் துல்லியமாக இருந்தது. ஒவ்வொரு பாடத்திற்கும் நீங்கள் கொடுத்திருந்த குறிப்புகளும், வீடியோ விளக்கங்களும் மிகவும் எளிமையாகப் புரியும்படி இருந்தன.
அதனால், தேர்வை மிகவும் சுலபமாக, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டேன. தேர்வில் தேர்ச்சியும் பெற்றேன்.
கேள்வி: Air Force Non Combatant வேலையில் Training எப்படி இருந்தது? அது உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

சந்தோஷ்: ஜனவரி 1, 2025ஆம் தேதி, கர்நாடகாவில் உள்ள பெல்காமில் என் பயிற்சி தொடங்கியது. அதுவரை கிராமத்திலேயே இருந்த எனக்கு, அது முற்றிலும் ஒரு புதிய உலகம். பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது. உடல் வலிமையை விட, மன உறுதிதான் அங்கு அதிகமாகச் சோதிக்கப்பட்டது.
“மனதில் உறுதி வேண்டும்” என்பதை நான் அங்குதான் நேரில் உணர்ந்தேன். பலமுறை, நம்மால் இதை முடிக்க முடியாதோ என்று கூடத் தோன்றும். ஆனால், என் குடும்பமும், என் லட்சியமும் என் கண்முன்னே வந்து நிற்கும்.
எனக்குப் பயிற்சி அளித்த அதிகாரிகள் மிகவும் சிறப்பானவர்கள். அவர்கள் வெறும் பயிற்சியாளர்கள் மட்டுமல்ல, நல்ல வழிகாட்டிகளாகவும் இருந்தார்கள். அவர்களின் ஊக்கத்தினால் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் என் முதல் பணியில் இணைந்திருக்கிறேன்.
கேள்வி: உடல் தகுதித் தேர்வுக்கு எவ்வாறு பயிற்சி செய்தீர்கள்?
சந்தோஷ்: நான் ஏற்கனவே என்.சி.சி-யில் இருந்ததால், எனக்கு ஓரளவிற்கு உடல் தகுதி இருந்தது. இருந்தாலும், நான் பயிற்சியை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கல்லூரியில் என் சீனியர்கள் கொடுத்த கடுமையான ஓட்டப் பயிற்சி மற்றும் Running Drills போன்ற பயிற்சிகள் என்னை மேலும் மெருகேற்றின.
அதனால், 7 நிமிடங்களில் முடிக்க வேண்டிய 1.6 கி.மீ ஓட்டத்தை, நான் வெறும் 5.30 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டேன். தொடர்ச்சியான பயிற்சி இருந்ததால், உடல் தகுதித் தேர்வு எனக்கு கஷ்டமாக தெரியவில்லை.
கேள்வி: இறுதியாக, Air Force Non Combatant பணி பற்றியும், உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
சந்தோஷ்: சார், நிறைய பேருக்கு இந்தப் பணி பற்றி சரியாகத் தெரிவதில்லை. இதை ஒரு House Keeping அல்லது Hospitality சார்ந்த பணி என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. இது இந்திய விமானப் படை வளாகத்திற்குள் செய்யப்படும் ஒரு மிக நேர்த்தியான மற்றும் கௌரவமான பணி. ராணுவ வீரர்களுக்குத் துணைநிற்கும் ஒரு முக்கியமான வேலை.
இங்குள்ள சூழல் மிகவும் பாதுகாப்பானது. விடாமுயற்சியும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த இடத்திற்கு வரலாம். வறுமையோ, சூழலோ ஒருபோதும் உங்கள் கனவுகளுக்குத் தடையாக இருக்க முடியாது. உங்களை நம்புங்கள். உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
நிறைவாக:
சந்தோஷ் குமாரின் வார்த்தைகள், வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமல்ல, அது ஒரு தன்னம்பிக்கை மந்திரம். சரியான வழிகாட்டுதலும், விடாமுயற்சியும் சேர்ந்தால், எப்பேர்ப்பட்ட சவால்களையும் வென்று, லட்சிய சிகரத்தை அடையலாம் என்பதற்கு சந்தோஷின் வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த சான்று.
தேசத்திற்கு பணி ஆற்ற விரும்பும் ஒவ்வொரு இளைஞனும், சந்தோஷின் பயணத்திலிருந்து உத்வேகம் பெற்று, தங்கள் கனவுகளை நோக்கிப் பயணிக்க என் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

